திருமணம் பதிவை எளிதாக்கும் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது!
By: Monisha Thu, 17 Sept 2020 09:03:32 AM
தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்ட திருத்த மசோதா நேற்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடரின் நேற்றைய கூட்டத்தில் தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதாவை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் 2009-ம் ஆண்டு சட்டத்தின்படி, திருமணம் எந்த இடத்தில் நடக்கிறதோ, அந்த பகுதியில் உள்ள பதிவாளரின் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும்.
இந்த நிலையில் கடந்த 2019-20-ம் ஆண்டின் வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை தொடர்பான மானிய கோரிக்கையின் போது, மணமகன் அல்லது மணமகள் தங்கும் இடத்தில் உள்ள பதிவாளரின் அலுவலகத்திலும் திருமணம் பதிவு செய்வதை எளிதாக்குவதற்காக சட்டத்தில் தேவையான திருத்தம் செய்யப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார்.
அந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்காக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக சட்டசபையில் இந்த சட்ட மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.