லெஜியன் ஆப் மெரிட் விருது, மிக உயர்ந்த கவுரவம் - பிரதமர் மோடி
By: Karunakaran Wed, 23 Dec 2020 09:08:54 AM
அமெரிக்காவின் மிக உயர்ந்த ராணுவ விருதுகளில் ஒன்றான ‘லெஜியன் ஆப் மெரிட்’டை பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வழங்கியிருக்கிறார். மோடியின் சார்பில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித்சிங் சாந்து நேற்று முன்தினம், வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரியனிடம் இருந்து இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
இரு நாட்டு வியூக கூட்டுறவை மேம்படுத்தியதற்காகவும், இந்தியாவை ஒரு உலக சக்தியாக வளர்த்து வருவதற்காகவும் இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது வழங்கப்பட்டிருப்பது மிக உயர்ந்த கவுரவம் என்று கூறினார்.
மேலும் அவர், இரு தரப்பு உறவை மேம்படுத்துவதில் இரு நாட்டு மக்களின் முயற்சியை அங்கீகரிப்பதாக இந்த விருது அமைந்திருக்கிறது. இந்திய- அமெரிக்க மக்களின் தனித்த திறன்களை உயர்த்த இரு நாட்டு உறவு உதவும். அதன்மூலம், ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் பலனளிக்கும் உலக தலைமையை வழங்க முடியும் என தெரிவித்தார்.
21-ம் நூற்றாண்டு, இரு நாடுகளுக்கும் அளவற்ற சவால்களுடன் அளவற்ற வாய்ப்புகளையும் வழங்கியிருக்கிறது. இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவதில் அமெரிக்க அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருடனும் இணைந்து உழைப்பதில் எனது உறுதி, கடமையை இக்கணத்தில் வெளிப்படுத்துகிறேன் என மோடி தெரிவித்துள்ளார்.