சிறுத்தை குட்டி உயிரிழப்பு; வன ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு
By: Monisha Fri, 27 Nov 2020 12:53:18 PM
நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி கிளப் ரோடு பகுதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இந்த வனத்தில் சிறுத்தை, புலி, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசிக்கின்றன. வனவிலங்குகள் குடிநீர், உணவு தேடி அடிக்கடி ஊருக்குள் நுழைவது இந்த பகுதியில் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இன்று காலை லாங்வுட் சோலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 1½ வயது ஆண் சிறுத்தை கிளப் ரோடு பகுதிக்கு வந்தது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் சிறுத்தை மீது மோதியது. இதில் சிறுத்தை குட்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சம்பவ இடத்திலேயே இறந்தது.
இன்று காலை அந்த வழியே சென்றவர்கள் சிறுத்தை குட்டி காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கோத்தகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
ரேஞ்சர் செல்வக்குமார், வனவர் வீரமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்த சிறுத்தை குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனர். மேலும் சிறுத்தை குட்டியை தேடி தாய் சிறுத்தை ஊருக்குள் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வன ஊழியர்கள் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.