புதிய பார்லிமெண்ட் கட்டடம் கட்டும் திட்டத்திற்கு அதிருப்தி தெரிவித்து கடிதம்
By: Nagaraj Wed, 23 Dec 2020 8:29:23 PM
அதிருப்தி தெரிவித்து கடிதம்... டில்லியில் புதிய பார்லிமெண்ட் கட்டடம் கட்டும் திட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்து 69 ஓய்வுப்பெற்ற அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
டில்லியில் தற்போதுள்ள பார்லிமென்டில் போதிய இடவசதி இல்லாததால் அதன் அருகிலேயே ரூ.971 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த 10ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 'சென்ட்ரல் விஸ்டா' என்ற அழைக்கப்படும் இத்திட்டத்திற்கு அதிருப்தி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 69 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
அரசியல் சாசன நடத்தை குழு என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், 69 பேரும் கையெழுத்திட்டுள்ளனர். கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு கடினமான பொருளாதார சூழலில் இருக்கும்போது, கொரோனா தொற்றால்
லட்சக்கணக்கானோர் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கும்போது, பகட்டு காட்டும் ஒரு
திட்டத்துக்கு அரசு இவ்வளவு பெரும் தொகையை செலவிடுவது ஏன்?
புதிய
பார்லிமெண்ட், துணை ஜனாதிபதி இல்லம், பிரதமர் இல்லம் கட்டுவதில் பிடிவாதம்
பிடிப்பது அதிகாரத்தின் ஆணவத்தை காட்டுவதாக உள்ளது. இத்திட்டத்துக்கு
சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட விதமும் கவலையை ஏற்படுத்துகிறது. மேலும்,
பார்லி., கட்டடத்துக்கு முறைப்படி ஜனாதிபதி தான் அடிக்கல் நாட்டியிருக்க
வேண்டும். தவிர, இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது அடிக்கல்
நாட்டப்பட்டது நீதிமன்றத்தை மீறிய செயல்.
இவ்வாறு பிரதமருக்கு கடிதம் எழுதி 69 அதிகாரிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.