மீண்டும் மெடிக்ளைம் பிரிவில் நுழைய தயாராகும் எல்ஐசி நிறுவனம்
By: Nagaraj Tue, 16 Aug 2022 10:54:07 AM
புதுடில்லி: மீண்டும் மெடிக்ளைம்... எல்.ஐ.சி., நிறுவனம், மீண்டும் 'மெடிக்ளைம்' பிரிவில் நுழைவதற்கு தயாராக இருப்பதாகவும், கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அதன் தலைவர் எம்.ஆர்.குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், மீண்டும் மெடிக்ளைம் பாலிசிகள் வழங்குவது குறித்து, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அண்மையில் தெரிவித்துள்ளது குறித்து ஆலோசித்து வருகிறோம். நாங்கள் ஏற்கனவே மெடிக்ளைம் பிரிவில் செயல்பட்டு வந்துள்ளோம். அது குறித்த அனுபவம் எங்களுக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உடல்நலக் காப்பீட்டில், இழப்பீடுகளை வழங்கும் வகையிலான மெடிக்கிளைம் பாலிசிகள் தான், மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இருப்பினும், கடந்த 2016ல், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம், மெடிக்ளைம் திட்டங்களை சந்தையிலிருந்து திரும்பப் பெறுமாறு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., கேட்டுக் கொண்டது.
அண்மையில், அனைத்து குடிமக்களுக்கும் வரும் 2030ம் ஆண்டுக்குள் மெடிக்ளைம்
பாலிசி வழங்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து, ஆயுள்
காப்பீட்டு நிறுவனங்களும் மெடிக்ளைம் பிரிவில் மீண்டும் செயல்படுவதற்கான
நேரம் வந்துள்ளதாக, ஐ.ஆர்.டி.ஏ.ஐ. தலைவர் தேபஷிஷ் பாண்டா கூறியுள்ளார்.
இருப்பினும்,
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், மெடிக்ளைம் பிரிவில் மீண்டும் செயல்படுவது
குறித்த இறுதி முடிவுகள் எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்
தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது 24.50 லட்சம் ஆயுள் காப்பீட்டு
முகவர்கள் உள்ளனர். ஆனால், பொது காப்பீட்டில், 3.60 லட்சம் முகவர்கள்
மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், உடல்நல
காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும்பட்சத்தில், அரசு அதன்
இலக்கை எளிதாக அடைய முடியும் என கருதப்படுகிறது.