நியூசிலாந்தில் 2 மசூதிகளில் தாக்குதல் நடத்தியவனுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை
By: Karunakaran Thu, 27 Aug 2020 3:24:59 PM
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயது பிரென்டன் டாரண்ட் என்பவர் வெள்ளை நிறவெறி கொண்டவர். இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நியூசிலாந்தின் அல்நூர் மற்றும் லின்வுட் மசூதிகளில் புகுந்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக எந்திரத் துப்பாக்கிகளால் கொடூரமாக கொன்றார். இதை பேஸ்புக்கில் நேரலையாகவும் ஒளிபரப்பினார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், தண்டனை குறித்த விசாரணை 4 நாட்கள் நடைபெற்றது. இதில், உயிர் தப்பிய 90 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தாக்குதலின் பயங்கரத்தையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கூறினர். தற்போது, பிரென்டன் டாரண்டுக்கு, நீதிபதி கேமரூன் மாண்டர் பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
தந்தையின் கால்களைப் பிடித்துக் கொண்டு நடுநடுங்கி நின்ற 3 வயது குழந்தையை டாரன்ட் கொலை செய்ததால், அவன் மனிதத்தன்மையற்றவன் என தீர்ப்பின்போது நீதிபதி கூறினார். நியூசிலாந்து நாட்டின் அதிகபட்ச தண்டனை முதல்முறையாக இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. பிரென்டன் டாரண்டு சிறைவாசத்தின் செலவை அவரது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதியின் தண்டனையைப் பெற்று நிறைவேற்ற வேண்டிய நேரம் இது என்று கூறினார். நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், நியூசிலாந்து இதற்கு முன் பார்த்ததில்லை, இது நாம் முன்னர் பார்த்திராத ஒரு தீர்ப்பு. அந்த நபர் ஒருபோதும் பகல் ஒளியைக் காண மாட்டார் என்பதை அறிந்து கொள்வது எனக்கு நிம்மதியை அளித்தது என கூறினார்.