- வீடு›
- செய்திகள்›
- இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
By: vaithegi Sun, 23 Oct 2022 09:34:44 AM
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று, பின்னர் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 24-ம் தேதி காலை புயலாக வலுப்பெறும்.
இதைஅடுத்து அதன்பின்னர் வடக்கு - வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து 25-ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே அதாவது அக்.26க்கு பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், இந்த புயல் கடல் பரப்பில் இருந்த ஈரப்பதம் முழுவதையும் ஈர்த்துக்கொள்ளும் என்பதால், வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் வலுவாக இருக்காது என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்ததாவது, "புயலால் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புயல் வலுவிழந்த பிறகுதான் இயல்பு நிலைக்கு திரும்பும். அதன்பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்குவது குறித்து அறிவிக்கப்படும். அத்துடன் புயல் ஈரப்பதத்தை ஈர்த்துக்கொண்டு செல்வதால் பருவமழை வலுவாக தொடங்குமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 23-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும், 24, 25-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26-ம் தேதி ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.