நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
By: vaithegi Fri, 27 Jan 2023 09:53:57 AM
சென்னை: பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இதன் காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 3 தினங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.
இதனை அடுத்து இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதனைதொடர்ந்து கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
மேலும் 30ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.