முழுமுடக்கம் எதிரொலி: மீன்கள் வாங்க ஏராளமான மக்கள் துறைமுகங்களில் குவிந்தனர்
By: Monisha Sat, 25 July 2020 11:34:09 AM
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சக்கட்ட அளவில் பதிவாகி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தில் 6-வது கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தற்போது, மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், நாளை 4-வது முழு ஊரடங்கு வருகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும், மருத்துவ சிகிச்சைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் வாகனங்களுக்கும், அமரர் ஊர்திகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முழுமுடக்கம் என்பதால் துறைமுகங்களில் மீன்கள் வாங்க ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். சென்னை காசிமேடு, கடலூர் துறைமுகங்களில் வியாபாரிகள், பொதுமக்கள் மீன்களை வாங்கி செல்வதால் கூட்டம் அதிகரித்துள்ளது.