இந்தியா வழங்கிய சைக்கிளை ஓட்டிய மடகாஸ்கர் பிரதமர்
By: Nagaraj Mon, 15 Aug 2022 8:57:36 PM
மடகாஸ்கர்: சைக்கிளை ஓட்டினார்... சுதந்திர தினத்தை முன்னிட்டு மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா வழங்கியுள்ளது.
இந்திய தேசத்தின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் தோழமை நாடான மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா வழங்கியுள்ளது. மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய தூதர் அபய் குமார் மற்றும் மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே ஆகியோர் ஒன்றாக இந்த சைக்கிள்களை ஓட்டினர்.
இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் ஒன்றாக சைக்கிள் ஓட்டினர். அண்டனானரிவோவில் செயல்பட்டு வரும் மடகாஸ்கர் மற்றும் கொமோரோஸ் நாட்டுக்கான இந்திய தூதரகம் இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.
மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மடகாஸ்கர் தலைநகர் அண்டனானரிவோவில் உள்ள இந்திய தூதரக கட்டிடம் இந்திய மூவர்ண விளக்குகளில் காணப்பட்டது. அங்கு இந்திய தூதர் அபய் குமார் தேசியக்கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.