மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59 ஆயிரத்து 546 ஆக உயர்வு
By: Monisha Fri, 29 May 2020 12:25:42 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரிப்பதால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் 1.65 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7466 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4706 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 71,106 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று 56 ஆயிரத்து 948 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 59 ஆயிரத்து 546 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 598 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1982 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18 ஆயிரத்து 616 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மும்பை தாராவி குடிசை பகுதியிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.