இலங்கை நான்காவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் மகிந்தா ராஜபக்சே
By: Karunakaran Sun, 09 Aug 2020 10:42:14 AM
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு கொரோனா தாக்கம் குறைந்த காரணத்தால் கடந்த 5-ஆம் தேதி கொரோனாவுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 225 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 196 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
மீதி 29 இடங்கள், கட்சிகள் பெறுகிற வாக்குகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 20 அரசியல் கட்சிகளும், 34 சுதந்திர குழுக்களும் இந்த தேர்தலில் களமிறங்கியது. இந்த தேர்தலில் 7,200-க்கும் அதிகமான வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொறுப்பினை, 1 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் பெற்றிருந்தனர்.
225 உறுப்பினர்களை கொண்ட இந்தத் தேர்தலில் பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அந்த கட்சிக்கு 145 இடங்களும், கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைத்தன. தற்போது, இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற மகிந்தா ராஜபக்சே, இன்று நான்காவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.
இந்த பதவி ஏற்பு விழா கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் நடக்கவுள்ளது. மேலும் புதிய நாடாளுமன்றம் வரும் 20-ம் தேதி கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமர் ஆகியுள்ளதற்கு, இந்திய பிரதமர் மோடி, மகிந்தா ராஜபக்சேவை தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்துகளை கூறியது குறிப்பிடத்தக்கது.