இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமர் ஆவது உறுதி
By: Karunakaran Fri, 07 Aug 2020 09:25:38 AM
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு கொரோனா தாக்கம் குறைந்த காரணத்தால் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 225 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 196 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
மீதி 29 இடங்கள், கட்சிகள் பெறுகிற வாக்குகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 20 அரசியல் கட்சிகளும், 34 சுதந்திர குழுக்களும் இந்த தேர்தலில் களமிறங்கியது. இந்த தேர்தலில் 7,200-க்கும் அதிகமான வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொறுப்பினை, 1 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் பெற்றிருந்தனர்.
கொரோனா வைரஸஸுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில் 70 சதவீதத்துக்கும் சற்று அதிகமான வாக்குகள் பதிவானதாக தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்தா தேசப்பிரியா தெரிவித்தார். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி நேற்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்றது.
அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் குடும்ப கட்சியான எஸ்.எல்.பி.பி., ஆரம்பத்திலிருந்தே முன்னணி பெறத்தொடங்கியது. இதனால் மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமர் ஆவது உறுதியாகி விட்டது. இதுவரை இல்லாத வகையில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி இந்த தேர்தலில் பெரும் சரிவை சந்தித்தது.