மன்னார் மாவட்டத்தில் பெரும் போக நெற் செய்கை பாதிப்பு
By: Nagaraj Sat, 05 Dec 2020 2:37:51 PM
பெரும் போக நெற் செய்கை பாதிப்பு... வங்கக்கடலில் நிலை கொண்ட தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில், பெரும்போக நெற் செய்கை பாதிப்படைந்துள்ளது.
கடும் மழை காரணமாக 90 வீதமான பெரும்போக நெற் செய்கை நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ச்சியாக வெள்ளப் பாதிப்பு ஏற்படும் நிலையில் முற்றாக விவசாய செய்கை அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை சுமார் 23ஆயிரத்து 953.5 ஏக்கர் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ‘புரேவி’ புயல் கரணமாக ஏற்பட்ட கடும் மழையினை தொடர்ந்து விவசாய செய்கை நீரில் மூழ்கியுள்ளது.
பெரும் போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாய நிலங்களில் சுமார் ஒரு
அடிக்கு மேலாக வெள்ள நீர் தேங்கியுள்ளது. தொடர்ந்தும் குறித்த நிலை
காணப்பட்டால் பெரும் போக விவசாயம் முழுவதும் பாதிப்படையும் என விவசாயிகள்
கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 1061
ஏக்கர் விவசாய செய்கையும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 4826.5
ஏக்கர் விவசாய செய்கையும், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 3274 ஏக்கர்
விவசாய செய்கையும், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 11925 ஏக்கர்
விவசாய செய்கையும், மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 2867 ஏக்கர் விவசாய
செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை மடு பிரதேசச் செயலாளர்
பிரிவில் சின்ன வலயன் கட்டு சிறிய நீர்பாசனக் குளம் உடைப்பெடுத்துள்ளதோடு,
முருங்கன், நானாட்டான் இரணை இழுப்பைக்குளம், மறிச்சுக்கட்டி, பாலம்பிட்டி
சிறிய நீர்பாசனக் குளங்கள் வான் பாய்ந்து வருவதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.