நெருக்கடியான இந்த நேரத்தில் நாட்டிற்கு ஆதரவாக எங்கள் கட்சி நிற்கும் - மம்தா பானர்ஜி
By: Karunakaran Thu, 18 June 2020 2:12:53 PM
இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா-சீனா எல்லை பகுதியான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், எல்லையில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க வருகிற 19-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நெருக்கடியான இந்த நேரத்தில் நாட்டிற்கு ஆதரவாக எங்கள் கட்சி நிற்கும் என்றும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் முடிவை நாடும், ஆயுதப்படைகளும் முழுமையாக ஆதரிக்கும் என்றும், தொழில்நுட்ப ரீதியாக இது சரியான முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், சீனாவுடனான எல்லை நிலைப்பாடு குறித்து கூறுகையில், வெளி விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், இது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் கூறினார். எல்லையில் நடைபெற்ற மோதல் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா- சீனா முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.