தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் ..தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
By: vaithegi Mon, 11 Sept 2023 10:42:17 AM
சென்னை: தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் ... இன்று வெளியிட்டு உள்ள அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும் அன்னாரது பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையினை வலியுறுத்தினர்.
இதையடுத்து தியாகி இம்மானுவேல் சேகரனார் 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர்.
இந்த நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனார் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்" என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.