மணிப்பூர் சம்பவம்... இந்தியன் என்பதற்கே வெட்கமாக உள்ளது: கௌதம் கம்பீர் வேதனை
By: Nagaraj Sat, 22 July 2023 7:09:29 PM
மும்பை: இந்தியன் என சொல்வதேற்கே வெட்கமாக உள்ளது... மணிப்பூரில் குகி இனப் பெண்களுக்கு நேர்ந்த சம்பவத்தால் என்னை ஒரு இந்தியன் என சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருப்பதாக இந்திய அணி முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் சம்பவத்தை சாதாரண நிகழ்வாக கடந்து செல்ல முடியாது எனவும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை தடுப்பது மாநில முதல்வரின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: மணிப்பூரில் பெண்களுக்கு நடந்துள்ள இந்த கொடூரம் மிகுந்த வெட்கத்தை அளிக்கிறது. நான் இந்தியன் எனக் கூறிக் கொள்வதையே வெட்கமாக நினைக்கிறேன். ஏனென்றால், மணிப்பூரில் நிகழ்ந்துள்ள கொடூரம் அங்கு மட்டும் நடைபெறவில்லை. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்தக் கொடுமைகள் அரங்கேறுகின்றன.
மணிப்பூர் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் தலைகுனியச் செய்துள்ளது. அதனால், மணிப்பூர் சம்பவம் அரசியல் செய்யப்படக் கூடாது. எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தில் அரசியல் செய்கின்றன. 140 கோடி இந்தியர்களும் வெட்கப்பட வேண்டிய சம்பவம் இது என்றார்.