கட்சி உறுப்புரிமையிலிருந்து மணிவண்ணன் இடை நிறுத்தப்பட்டுள்ளார்
By: Nagaraj Sun, 06 Sept 2020 09:05:50 AM
இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்... தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்தும் மணிவண்ணன் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்தியகுழுவால் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் கொள்கைக்கு முரணாகவும், கட்சியின் தலைமைத்துவத்தைக் கேள்விக்குட்படுத்தும் வகையிலும் மணிவண்ணன் தன்னுடைய தேசிய அமைப்பாளர் பதவியையும், ஊடகப் பேச்சாளர் பதவியையும் கையாண்டார் என்ற முடிவுக்கு வந்தமையால் கட்சியின் மத்திய குழுவின் முடிவு அறிவிக்கப்பட்டிருந்தது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், ஊடகப் பேச்சாளர்
பதவியிலிருந்தும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டு உள்ளதாக
அவருக்கு எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த முடிவு
தொடர்பாக அவரிடம் பதிலினை எதிர்பார்த்திருந்தோம். இந்நிலையில்
எழுத்துமூலமாக மணிவண்ணன் மத்தியகுழுவுக்குத் தனது பதிலினை
அனுப்பியிருந்தார். அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ள விடயங்கள் மத்தியகுழு
ஆராய்ந்தது.
இவ்வாறான நிலையில் அவருடைய பதில்கள் ஏற்றுக் கொள்ளப்பட
முடியாததாகவும், மத்தியகுழுவின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாமல் அவர் செயற்பட
முடிவெடுத்ததைச் சுட்டிக் காட்டி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்தும்
இடைநிறுத்தப்பட்டிருப்பதாக இன்றைய தினம் மத்தியகுழுவால் அவருக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு அவருக்கு மின்னஞ்சல் மூலம்
அறிவிக்கப்பட்டு உள்ளதுடன் பதிவுத் தபால் மூலமும் அவருக்கு கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் குறித்த முடிவுகள் தொடர்பான
பதில்களை எழுத்துமூலமாக மத்தியகுழுவுக்கு அவர் அனுப்பி வைக்க முடியும்.
மணிவண்ணனின் உறுப்புரிமை நீக்கம் நிரந்தரமாக இல்லாதிருக்கும் வகையில்
தன்னுடைய நியாயங்களைப் பதிவு செய்யும் வகையில் அவரது கருத்துக்கள் அமைய
வேண்டும்.
இரண்டு வாரத்துக்குள் இதுதொடர்பான அவரது பதில்கள்
வழங்கப்படாதவிடத்து அவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்
உறுப்புரிமையிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார் எனவும் அவர் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.