- வீடு›
- செய்திகள்›
- பல நாடுகள் ரஷியாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை பெற விருப்பம் தெரிவித்துள்ளது - ரஷிய அதிபர்
பல நாடுகள் ரஷியாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை பெற விருப்பம் தெரிவித்துள்ளது - ரஷிய அதிபர்
By: Karunakaran Mon, 16 Nov 2020 08:11:38 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உலகின் முதன் முதலாக ரஷ்யா தனது கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தது.
உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியாக ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பல நாடுகளில் பரிசோதிக்கப்படுகிறது. இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாஸ்கோவில் இருந்தவாறு, வியட்னாம் நடத்திய கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் காணொலி காட்சி வழியாக பேசினார்.
அப்போது பேசிய விளாடிமிர் புதின், டஜன் கணக்கிலான நாடுகள் ரஷியாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை பெறவும், கூட்டாக தயாரிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், கொரோனா பரிசோதனை முறைகளை கூட்டாளிகளுக்கு இலவசமாக வழங்கி ஒத்துழைக்க ரஷியா தயாராக இருப்பதாவும் தெரிவித்தார். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.