பொதுத் தேர்வு நடத்த பல புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
By: Nagaraj Fri, 22 May 2020 4:57:04 PM
புதிய கட்டுப்பாடுகள்... கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்த பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடைசி தேர்வு மட்டும் மீண்டும் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற கடைசி தேர்வில் சுமார் 36 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு தேர்வுகளை நடத்தும் போதும், விடைத்தாள்களை திருத்தும் போதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும். எஸ்எஸ்எல்சி மற்றும் பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு நடத்தப்படும். தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் பயன்படுத்த 46 லட்சம் மாஸ்குகள் இலவசமாக வழங்கப்படும்.
தேர்வு நடைபெறும் இடங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்தால் மாற்று இடம் அறிவிக்கப்படும். அவர்களுக்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும். விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு தேர்வு முடியும் வரை விடுதிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்து தரப்படும். பள்ளி வாகனங்களும் இதற்காக பயன்படுத்தப்படும். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அப்படி செய்ய முடியாத மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் இருந்து அதனை பெற்றுக்கொள்ளலாம். அதிகம் பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று ஹால் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.