பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி
By: Karunakaran Tue, 27 Oct 2020 12:01:29 PM
பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன் ஷாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். அப்போதிலிருந்தே தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தற்போது பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளன.
பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, ஜாமியத் உலமா இ இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பிடிஎம்) என்கிற கூட்டணியை கடந்த மாதம் அமைத்தன. இந்த இயக்கத்தின் மூலம் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பேரணிகள், பொதுகூட்டங்கள், மக்கள் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் பஞ்சாப் மாகாணம் குஜர்ன்வாலா நகரிலும், சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியிலும் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் சார்பில் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த வரிசையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவாவில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் 3-வது பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றபோது, ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, 2018-ம் ஆண்டு தேர்தலின்போது பாராளுமன்றத்தில் குதிரை பேரம் செய்து மக்களின் விருப்பத்துக்கு எதிராக இம்ரான் கானை பிரதமராக்கியதற்காகவும், அரசியலமைப்பையும் சட்டங்களையும் கிழித்து மக்களை பசி மற்றும் வறுமையை நோக்கி தள்ளியதற்காகவும் ராணுவத்தளபதி பஜ்வா பதில் சொல்ல வேண்டும். எனது ராணுவம் அவதூறு செய்யப்படுவதை நான் விரும்பவில்லை. அதனாலேயே நான் தனி நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு குற்றம் சாட்டுகிறேன் என்று கூறினார்.