முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதாக மாவை சேனாதி ராஜா அறிவிப்பு
By: Nagaraj Tue, 29 Sept 2020 09:15:10 AM
முழு அடைப்பு போராட்டம் வெற்றி... வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும் என்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய முழு அடைப்புப் போராட்டத்தின் நிறைவில் மாலை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் கடப்பாடுகள் மனித குலத்தினாலும் ஐ.நா. சாசனத்தினாலும் உடன்படிக்கைகளினாலும் அங்கீகரிக்கப்பட்ட கடப்பாடாகும் என்றும் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் இக்கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்ற போதும் இலங்கையில்
இறந்தவர்கள் நினைவு கூரும் கடப்பாடுகள் அரசுகளினால் மறுக்கப்பட்டும்
நிராகரிக்கப்பட்டும் வருவதாக குற்றம் சாட்டினார்.
இதேவேளை 20ஆவது
திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றில் நிறைவேற்றினால் நாடாளுமன்ற ஜனநாயகம்
பலவீனப்படுத்தப்பட்டு சர்வாதிகார பலத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
முறையும் நாட்டில் இராணுவ மயமான பொலிஸ் அதிகாரமுமான ஆட்சி ஏற்படும் என்றும்
மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டினார்.