தமிழகத்தில் புதிதாக உதயமானது மயிலாடுதுறை மாவட்டம்
By: Monisha Mon, 28 Dec 2020 12:08:45 PM
தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியும், வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும், காஞ்சீபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டும் என மொத்தம் ஐந்து மாவட்டங்கள் புதிதாக உதயமானது.
புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட கலெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து, புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்வதற்கு, சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ். மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐ.பி.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக்காட்சி வழியாக மயிலாடுதுறை மாவட்டத்தை புதிதாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதன் மூலம், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 10.00 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடியில் இருந்தபடி, மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, 12.30 மணிக்கு மருத்துவ குழுவினரையும் சந்தித்து, உருமாறிய புதிய கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.