மே மாத சம்பளம் முழுமையாக வழங்கப்படும்; முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
By: Nagaraj Fri, 22 May 2020 10:22:05 AM
அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் முழுமையாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி கூறியதாவது:
அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் முழுமையாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக ஒத்திவைக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மாநிலத்திற்கான வருவாய் குறைந்து விட்டது. இதன் காரணமாகவே சம்பளத்தை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை செயலக ஊழியர் சங்க தலைவர் வெங்கட்ராமிரெட்டி கூறியதாவது: முதல்வர் மே மாதத்திற்கான முழு சம்பளத்தை ஊழியர்களுக்கு வழங்க ஒப்புக்கொண்டார். அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை கடைபிடிக்கின்றனர் என்றார்.