இந்தியாவில் 7 முதல் 11 வயதினருக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை
By: vaithegi Sat, 25 June 2022 9:40:10 PM
இந்தியா: டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
அத்துடன் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து நாட்டில் முதலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அத்துடன் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டு செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
கடந்த ஜனவரி மாதத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 12 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 7 முதல் 11 வயதினருக்கு சீரம் இந்தியா நிறுவனத்தின், ‘கோவோவாக்ஸ்’ செலுத்த வேண்டும் என்று அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இதனை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க மத்திய மருந்து ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இறுதிதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு ஒப்புதல் பெற இந்த பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் ஒப்புதல் கிடைத்தவுடன் 7 முதல் 11 வயதிற்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.