இறைச்சி கூடங்கள் மற்றும் மீன்கடைகள் முழுமையாக மூடப்படும் - சென்னை மாநகராட்சி
By: Monisha Fri, 19 June 2020 10:36:32 AM
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிட்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக இறைச்சிக் கடைகளும், மீன் கடைகளும் மூடப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதனால் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய நான்கு இறைச்சிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் இன்று முதல் மூடப்படும்.
இது தவிர சென்னை மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோழி, ஆடு, மாடு இறைச்சி கூடங்கள் மற்றும் மீன்கடைகள் ஆகியவை முழுமையாக மூடப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.