பெல்ஜியம் பிரதமருக்கு நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்த மருத்துவப் பணியாளர்கள்
By: Nagaraj Tue, 19 May 2020 2:11:09 PM
பெல்ஜியம் நாட்டில் கொரோனா பரவலுக்கு எதிராக பிரதமர் சோஃபி வில்ம்ஸ் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கூறி மருத்துவமனைக்கு வந்த அவருக்கு நூதன முறையில் தங்களின் எதிர்ப்பை காட்டியுள்ளனர் மருத்துவப் பணியாளர்கள்.
பெல்ஜியத்தில் 55,280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு குறைந்த அளவிலான பட்ஜெட் ஒதுக்கியது, மருத்துவ பணியாளர்களுக்கு குறைந்த அளவிலான சம்பளம், பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணியமர்த்தவில்லை.
தகுதியற்ற மருத்துவ பணியாளர்களை அரசாங்கம் நியமித்துள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் பிரதமர் சோஃபி வில்ம்ஸ் ரஸ்ஸல்ஸில் உள்ள செயின்ட் பியர் மருத்துவமனைக்கு வருகை தந்தார். அப்போது எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மருத்துவ பணியாளர்கள் அவர் வருகை தந்த சாலையில் திரும்பி நின்றனர். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம், கோஷம், சாலைமறியல் என்று எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடாமல் அமைதியாகவும், அதே நேரத்தில் வலிமையாக மருத்துவ பணியாளர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ள இந்த சம்பவம் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.