அமெரிக்காவில் சுதந்திர தின நாளின் இரவில் மெலனியா டிரம்ப் சிலை தீ வைத்து எரிப்பு
By: Karunakaran Fri, 10 July 2020 2:05:33 PM
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், சுலோவேனியா நாட்டை சேர்ந்தவர் ஆவார். சுலோவேனியா நாட்டில் அவருடைய சொந்த நகரமான செவ்னிகா அருகே, அவருக்கு மரத்தால் ஆன சிலை வைக்கப்பட்டிருந்தது. இதனை அமெரிக்க கலைஞரான பிராட் டவ்னி நிறுவினார்.
இந்நிலையில், அமெரிக்காவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நாளின் இரவில் இந்த சிலை தீ வைத்து எரித்து சேதப்படுத்தப்பட்டு, அகற்றப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்துவதாக சுலோவேனியா போலீசார், ரெயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றபோது மெலனியா டிரம்ப் நீல நிற ‘கோட்’ அணிந்திருந்ததை இந்த சிலை பிரதிபலித்தது. இந்த கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி நிறுவப்பட்டது. இந்நிலையில் இந்த சிலை நிறுவி ஒரே ஆண்டில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் தூண்டப்பட்டு அடிமைத்தனத்துடன் தொடர்புள்ள அமெரிக்க தலைவர்களின் நினைவுச்சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சுலோவேனியாவில் மெலனியா டிரம்ப் சிலை தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.