- வீடு›
- செய்திகள்›
- வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான உத்தரவை திரும்ப பெற டிரம்புக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடிதம்
வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான உத்தரவை திரும்ப பெற டிரம்புக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடிதம்
By: Karunakaran Sat, 11 July 2020 8:29:49 PM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதன் காரணமாக அங்கு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி உள்ளன. அண்மையில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இலையுதிர் காலத்து அனைத்து வகுப்புகளையும் ஆன்லைனில் நடத்தப்போவதாக தெரிவித்தது.
அதன்பின், ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி பாடம் நடத்தினால் அவற்றில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்படும் என உத்தரவிடப்பட்டது. இதனால், அமெரிக்காவில் பயிலும் இந்தியர்கள் உட்பட லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
தற்போது இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் டிரம்புக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைன் பாட திட்டத்தின் கீழ் பயிலும் சர்வதேச மாணவர்களை கட்டாயப்படுத்தவோ அல்லது நாடு கொடுத்தவோ தாங்கள் அறிவித்திருக்கும் திட்டம் கொடூரமானது, ஒத்துப் போகாதது. எனவே சர்வதேச மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளனர்.