தமிழகம் முழுவதும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள போலீசாருக்கு மனநல பயிற்சி
By: Monisha Wed, 01 July 2020 09:33:44 AM
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கைதாகி, நீதிமன்ற காவலில் கோவில்பட்டி சிறையில் இருந்த நிலையில், அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கி டி.ஜி.பி.திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மட்ட போலீசாருக்கும் அனுப்பி வைத்தார். அதன்படி தமிழகம் முழுவதும் போலீசாருக்கு அறிவுபூர்வமான மனநல பயிற்சி அளிக்கவும் அவர் ஆணை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார். பொதுமக்களிடம் அத்துமீறி நடந்ததாக வந்த புகார்கள் அடிப்படையில் 80 போலீசாரை அடையாளம் கண்டறிந்து, அவர்களுக்கு அறிவுபூர்வமான மனநல சிறப்பு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
கொரோனாவின் அச்சுறுத்தல் போலீஸ்துறையையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இந்தநிலையில் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள போலீசாரை கண்டறிந்து அவர்களுக்கு ‘கவுன்சிலிங்’ மூலம் பயிற்சி அளிக்க தமிழகம் முழுவதும் உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக டி.ஜி.பி.அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.