நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை... மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
By: Monisha Sat, 12 Sept 2020 10:24:01 AM
கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 830 கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 10 ஆயிரத்து 45 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 6 ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் மெதுவாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 10 ஆயிரத்து 45 கனஅடியில் இருந்து 10 ஆயிரத்து 68 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நேற்று காலை 91.89 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 92.12 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 55.10 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. காவிரி டெல்டா பாசனத்துக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.