இந்திய பிரதமரை உள்ளடக்கிய குழுவை அமைக்க மெக்சிகோ அதிபர் வலியுறுத்தல்
By: Nagaraj Fri, 12 Aug 2022 09:28:17 AM
மெக்சிகோ: அதிபர் வலியுறுத்தல்... பிரதமர் மோடி உள்ளிட்டோரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் வலியுறுத்தி உள்ளார்.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப். மாதம் தொடங்கிய போர் இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை. இதன் காரணமாக இந்த இரு நாடுகள் மட்டுமின்றி கிட்டதட்ட அனைத்து நாடுகளும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. ஒவ்வொரு சமயமும் போர் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் கொடூரமானது.
உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், அதனால் ஏற்படும் சமூக, பொருளாதார இழப்புகள் மற்றொரு புறம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தச் சூழலில் மெக்சிகோ நாட்டின் அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் புதியதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதாவது அடுத்த 5 ஆண்டுகளுக்குச் சர்வதேச அளவில் எந்தவொரு போரும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூன்று உலகத் தலைவர்களைக் கொண்ட ஆணையத்தை உருவாக்கும் திட்டத்தை ஐ.நா.விடம் முன்மொழிய உள்ளதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "ஐநாவிடம் இதை நான் எழுத்துப் பூர்வமான கோரிக்கையாகவே முன்வைப்பேன். எனது முன்னெடுப்பை உலகெங்கும் பரப்ப ஊடகங்கள் உதவும் என்று நம்புகிறேன். போரால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் மிக மோசமாக உள்ளது. இதனால், குறைந்தது அடுத்த 5 ஆண்டுகளுக்குப் போர் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலான ஒப்பந்தத்தைக் கொண்டு வர வேண்டும்.
இதற்காகச் சர்வதேச தலைவர்களைக் கொண்ட ஒரு ஆணையத்தை நாம் அமைக்க வேண்டும்.
இந்த உயர்மட்ட ஆணையத்தில் போப் பிரான்சிஸ், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ
குட்டரெஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடம்பெற வேண்டும்.
அவர்கள் மூவரும் உலகெங்கும் போரை நிறுத்துவதற்கான ஒரு திட்டத்தை முன்வைக்க
வேண்டும். அப்போது தான் உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்ற
முடியும்.
போரால் ஏற்படும் ஆபத்துகள் மிக மோசமானவை. அடுத்த 5
ஆண்டுகள் போர் காரணமாக ஏற்படும் பதற்றம், வன்முறை இருக்காது என்பது
தெரிந்தாலே நமக்கு அது நல்ல முடிவுகளைத் தரும். இந்த முடிவை உலக நாடுகள்
செவிகொடுத்து ஏற்கும் என்று நம்புகிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், போர் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர்
சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது
தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "போரும் சர்வதேச மோதல்களும் எவ்வித
வளர்ச்சி அல்லது நல்ல முடிவுகளைத் தரவில்லை. அவை உலகப் பொருளாதார
நெருக்கடியைத் தான் ஏற்படுத்தியது. பணவீக்கத்தை அதிகரித்து, உணவுப்
பற்றாக்குறையையும், அதிக வறுமையையும் ஏற்படுத்தியது. போரினால் நாம் விலை
மதிப்பில்லாத பல உயிர்களை இழக்க நேரிட்டது. கடந்த ஓராண்டில் உலக நாடுகள்
செய்த காரியம் இது தான்! நாம் போர்களை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இது
போன்ற சர்வதேச முன்னெடுப்புகள் தைவான், இஸ்ரேல், பாலஸ்தீனம் விஷயத்தில்
உடன்பாடுகளை எட்டுவதற்கு உதவும். மேலும், உலகெங்கிலும் உள்ள அனைத்து
அரசுகளும் ஐ.நா.வுக்கு ஆதரவாக இணைய வேண்டும். அப்போது தான் போரைத்
தவிர்த்து நம்மால் வளர்ச்சியை அடைய முடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.