அயர்லாந்து பாராளுமன்ற தேர்தலில் மைக்கேல் மார்டின் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு
By: Karunakaran Mon, 29 June 2020 10:37:49 AM
கடந்த பிப்ரவரி மாதம் அயர்லாந்து நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது, எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு புதிய அரசை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்படி, அந்நாட்டின் இருபெரும் கட்சிகளான பியானா பெயில் மற்றும் பைன் கெயில் பேச்சுவார்த்தை நடத்தி,கூட்டணி அமைக்க ஒப்புக்கொண்டன.
தற்போது அந்நாட்டு பிரதமரை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு அந்நாட்டு பாராளுமன்றத்தின் கீழவையில் நடைபெற்றது. இந்த ஓட்டெடுப்பு தேர்தலுக்கு பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்டின் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஓட்டெடுப்பு நடைபெற்றபோது, கீழ் அவையில் மொத்தமுள்ள 160 உறுப்பினர்களில் 93 பேர் மைக்கேல் மார்ட்டினுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 63 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். மேலும், 3 பேர் ஓட்டெடுப்புக்கு வரவில்லை. கீழ் அவையின் சபாநாயகருக்கு ஓட்டு போடும் அதிகாரம் கிடையாது என்பதால் மைக்கேல் மார்ட்டின் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனால் மைக்கேல் மார்ட்டின் அந்நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். வரது தலைமையில் புதிய மந்திரி சபை அமைக்கப்பட்டது. 15 மந்திரிகள் பதவி ஏற்றனர். தற்போது பிரதமராக பதவியேற்றுள்ள மைக்கேல் மார்ட்டின் வருகிற 2022 ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவியில் நீடிப்பார். அதன்பின் பைன் கெயில் கட்சியின் தலைவர் லியோ வரட்கரிடம் பொறுப்பை ஒப்படைப்பார்.