ஆஸ்திரேலியாவில் சீன மாணவர்களை கடத்தி கோடிகணக்கில் பணம் பறிப்பு
By: Karunakaran Tue, 28 July 2020 5:05:09 PM
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். பணக்கார குடும்பத்தை சேர்ந்த சீன மாணவர்களே பெரும்பாலும் அங்கு படித்து வருகின்றனர். இந்நிலையில், பணக்காரக சீன மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை குறி வைத்து கடத்துவதை ஆஸ்திரேலிய கும்பல் ஒன்று வழக்கமாகக் கொண்டுள்ளது.
அதிகாரிகள் போல மாணவர்களை இந்த கும்பல் போனில் தொடர்பு கொண்டு, சீனாவில் குற்றமிழைத்து விட்டு இங்கே தப்பி வந்துள்ளீர்கள் ; உங்களை மீண்டும் நாடு கடத்தப் போகிறோம் என மாணவர்களை மிரட்டுவார்கள். இதனால் பயந்த மாணவர்கள் அந்த கும்பல் வரச்சொல்லும் இடத்திற்கு செல்வர். பின்னர் அவர்களை அந்த கும்பல் கடத்தி சென்று அறையில் அடைத்து வைத்து விடும்.
கடத்தப்பட்ட மாணவர்களை அரை நிர்வாணமாக்கி கயிற்றில் கட்டிப் போட்டு, அதனை வீடியோ எடுத்து சீனாவில் வசிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த கும்பல் அனுப்பு வைக்கும். அதன்பின் அந்த கும்பல் இவ்வளவு பணம் கொடுத்தால் விட்டுவிடுவோம் என்று மாணவர்களின் பெற்றோரை மிரட்டுவார்கள். இதுவரை சீன மாணவர்களை 8 பேரை கடத்திய மர்மக்கும்பல் இந்த ஆண்டில் மட்டும் 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை கறந்துள்ளது.
இதனால் சிட்னியில் படித்து வரும் சீன மாணவர்கள் கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று அந்த நகர போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் போனில் ஏதாவது மிரட்டல் வந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்க வேண்டுமென்று சீன மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.