குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அரசு கொள்முதல் நடைமுறை தொடரும் - பிரதமர் மோடி
By: Karunakaran Sun, 20 Sept 2020 8:43:42 PM
விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா, விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டால், குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இதனை மையமாக வைத்து விவசாயிகளும் போராட்டம் நடத்துகின்றனர். மேலும் எதிர்க்கட்சிகள் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், நான் ஏற்கனவே கூறியதையே மீண்டும் கூறுகிறேன். குறைந்தபட்ச ஆதரவு விலை நீடிக்கும், அரசு கொள்முதல் செய்யும் நடைமுறையும் தொடரும். விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு இருக்கிறது. இந்த மசோதாக்கள் மூலம் எதிர்கால தொழில்நட்பத்தை விவசாயிகள் எளிதில் அணுக முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இந்த மசோதாக்கள், உற்பத்தியை ஊக்குவிப்பதுடன் சிறந்த பலனை தரும். கட்டுப்பாடுகள், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அரசு கொள்முதல் செய்யும் முறை தொடரும் என்று கூறியுள்ளார்.