நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ்
By: Monisha Sat, 12 Dec 2020 5:21:12 PM
திருவாரூர் மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மழைநீரால் சூழப்பட்ட சம்பா, தாளடி பயிர்களை பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக சம்பா, தாளடி உள்ளிட்ட நெற்பயிர்கள் மழைநீரால் சூழ்ந்து பாதிப்புள்ளாகியுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 2,22,120 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. 1,35,590 விவசாயிகள் தங்களது 3,96,675 ஏக்கர் நெற்பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். அந்த காப்பீட்டிற்கான தொகையினை பெற்று தருவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.
தமிழக முதல்-அமைச்சர் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நி்வாரணம் வழங்கப்படும் என்று கூறினார்.