உதயநிதிக்கு அமைச்சர் பதவிக்கு வருவது குறித்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம்
By: Nagaraj Tue, 13 Dec 2022 8:47:00 PM
சென்னை: உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தது பெருமையாக உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் எம்எல்ஏ உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது: சேப்பாக்கம் எம்எல்ஏ., உதயநிதியாக இருந்தாலும் சரி, நண்பர் உதயநிதியாக இருந்தாலும் சரி, நண்பராக எனது வாழ்த்துக்கள். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது பெருமையாக இருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார்.
இந்தப் பிரசாரத்துக்கு முன்பாகவே இளைஞர் அணிச் செயலாளராக வேண்டும் என்று
அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, தலைவர்
மு.க.ஸ்டாலின் ஒரே ஒரு விஷயத்தைச் சொன்னார். முதலில் தமிழகம் முழுவதும்
பிரசாரம் செய்து தனது உழைப்பை முதலில் காண்பித்து தன்னை நிரூபித்துக்
காட்டட்டும். பிறகு பார்ப்போம் என்றார்.
அந்தத் தேர்தலில் நல்ல
வெற்றியைப் பெற்றோம். மேலும், 2021ல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்
செய்து மாபெரும் வெற்றியை அடைந்தோம். அப்போது இந்த வெற்றி உங்களால் தான்
என்று நான் அவரிடம் கூறியபோது, இந்த வெற்றி எனக்காக இல்லை.
இந்த
வெற்றி தலைவருக்கும், உடன்பிறந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கிடைத்த
வெற்றி என தன்னடக்கத்துடன் கூறினார். அவருக்கு அமைச்சர் பொறுப்பு
வழங்கப்பட்டுள்ளது. அவர் எடுக்கும் ஒவ்வொரு பணியிலும் தனது கடின உழைப்பை
செலுத்தி, பொறுப்பேற்கும் களத்தில் தன்னை நிரூபிப்பார் என்ற நம்பிக்கை
எனக்கு உள்ளது,”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.