Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அம்மன் திருக்கோயில்களுக்கு பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவிப்பு

அம்மன் திருக்கோயில்களுக்கு பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவிப்பு

By: vaithegi Sun, 09 July 2023 09:48:48 AM

அம்மன் திருக்கோயில்களுக்கு பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவிப்பு


சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில் மக்கள் தாய்தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருகின்றனர். பல்வேறு திருக்கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெருவிருப்பமாகக் கொள்கின்றனர். எனவே இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டி உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து எதிர் வரும் ஆடி மாதம் பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

2022 – 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் ”தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், வைணவத் திருக்கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.இதையடுத்து இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக கடந்தாண்டு ஆடி மாதம் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ஆன்மிகப் பயணம் பெரும் உற்சாக வரவேற்பை பெற்றதோடு, மிகுந்த மனநிறைவையும் தந்ததாக கலந்து கொண்ட பக்தர்கள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, இந்தாண்டு ஆடி மாதமும் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை காளிகாம்பாள் திருக்கோயில், இராயபுரம் அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 9 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருக்கோயில், மயிலாப்பூர் முண்டககண்ணியம்மன் திருக்கோயில், மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 10 திருக்கோயில்களுக்கு இரண்டாவதாக ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

spiritual tourism,devotees , ஆன்மிகச் சுற்றுலா ,பக்தர்கள்

மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் வெக்காளியம்மன் திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் திருக்கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 8 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் மகா மாரியம்மன் திருக்கோயில், திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில், தஞ்சை பெரியநாயகி உடனுறை பிரகதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட 10 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி அம்மன் திருக்கோயில், மடப்புரம் பத்ரகாளியம்மன் திருக்கோயில், அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் உள்ளிட 6 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த ஆன்மிகச் சுற்றுலா பக்தர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு திருக்கோயில் பிரசாதம், திருக்கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும். பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பதிவு செய்திட வேண்டும். இதனை அடுத்து இது தொடர்பாக www.ttdconline.com என்ற சுற்றுலாத்துறை இணையதளத்திலும், 044 – 25333333, 25333444 என்ற தொலைபேசி எண்களிலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 1111 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். ஆகவே, இறையன்பர்கள், சுற்றுலா பயணிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அம்மன் அருள் பெற்று மனநிறைவு அடையலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


Tags :