எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை காலால் எழுதிய மாணவருக்கு மந்திரி சுரேஷ்குமார் பாராட்டு
By: Karunakaran Sat, 27 June 2020 11:11:04 AM
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவல் அதிகரித்தபோதிலும் அம்மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. மாணவர்கள் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வு எழுத வந்திருந்திருந்தனர்.
இந்நிலையில், தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் டவுன் கஞ்சிகரா பேட்டே பகுதியை சேர்ந்த ராஜேஷ்-ஜலஜாக்ஷி ஆச்சார்யா தம்பதியின் மகன் கவுசிக் என்ற மாணவருக்கு பிறவியிலேயே ஒரு கை கிடையாது. மற்றொரு கையும் ஊனமாக உள்ளது. ஒரு கை இல்லாவிட்டாலும் யாருடைய உதவியும் இன்றி, அவர் காலால் தேர்வை எழுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அம்மாணவர் தரையில் அமர்ந்து தேர்வு எழுதும் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் அவருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாரும் அவரை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பண்ட்வால் எஸ்.வி.எஸ். பள்ளியில் மாணவர் ஒருவர் கை இல்லாவிட்டாலும் யாருடைய உதவியும் இல்லாமல் காலால் தேர்வு எழுதியது என் இதயத்தை கணக்க வைத்தது. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டை தெரிவித்து கொள்கிறேன். அந்த மாணவரை போன்றவர்கள் தான் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.