புதுச்சேரியில் இரவு நேர ரோந்தை அதிகரிக்க அமைச்சர் வலியுறுத்தல்
By: Nagaraj Fri, 28 July 2023 09:38:38 AM
புதுச்சேரி: இரவு நேர ரோந்தை அதிகப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தி உள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு நடந்து வருகிறது. மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஒரு கும்பல் திருடிச் சென்றது. இது புதுவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அமைச்சர் நமச்சிவாயம், போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார்.
காவல்துறை தலைமையகத்தில் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். டி.ஜி.பி. சீனிவாஸ், முதுநிலை போலீஸ் சூப்பிரண்டுகள், சூப்பிரண்டுகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதுவையில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கஞ்சா, போதை, வெடி கலாசாரத்தை கட்டுப்படுத்தவும், இரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்கவும், வெளி மாநில சுற்றுலா பயணிகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தினார். மேலும் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.