மியான்மாரில் இருந்து திரும்பிய 22 பேரை வரவேற்ற அமைச்சர்
By: Nagaraj Sat, 19 Nov 2022 1:01:48 PM
மியான்மர்: அமைச்சர் வரவேற்றார்... மியான்மாரில் சிக்கி தவித்து சென்னை திரும்பிய 22 பேரை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
தமிழகம் மற்றும் இந்தியாவில் இருந்து தாய்லாந்திற்கு தகவல் தொழில் நுட்ப பணிக்காக அழைத்து சென்று சட்டவிரோதமான பணிகள் செய்ய சொல்லி துன்புறுத்திவதாகவும் அங்கு சிக்கி தவிப்பவர்களை மீட்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்திய தூதரக உதவியுடன் தமிழக அரசின் அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை முலமாக கடந்த மாதம் மியான்மரில் இருந்து 26 பேரை மீட்டு அழைத்து வரப்பட்டனர். தற்போது 3ம் கட்டமாக 22 பேர் மியான்மாரில் இருந்து மீட்கப்பட்டு தாய்லாந்து வழியாக ஐதரபாத், மும்பை ஆகிய விமான நிலையங்களுக்கு வந்தனர்.
பின்னர் அங்கிருந்து விமானங்கள் முலம் சென்னை விமான நிலையம் வந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் 22 பேரையும் தமிழக அயலக வாழ் தமிழர் நலத்துறை
அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். பின்னர் தமிழக அரசின் செலவில் சொந்த
ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
அப்போது பேசிய
அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகத்தில் இருந்து வாழ்வாதாரத்திற்காக போலி
ஏஜெண்டுகள் மூலம் ஆசை வார்த்தைகளை நம்பி கம்போடியா, மியான்மார் ஆகிய
நாடுகளுக்கு சென்ற இளைஞர்கள் சட்ட விரோதமாக செயல்பட வற்புறுத்தியதால்
தவித்தனர்.அவற்றை மறுத்த காரணத்தினால் பல்வேறு சங்கடங்களுக்கு
ஆளாக்கப்படுகிறார்கள் என்ற தகவல் பெற்றோர்கள் மூலமாக தமிழக முதலமைச்சருக்கு
வந்தது.
முதலமைச்சர் உத்தரவின் பேரில் மீட்கும் பணி தொடர்ந்து
நடைபெற்று வருகிறது. மியான்மார், கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து 64
பேரை அழைத்து வந்திருக்கிறோம் என்றார்.