ராமர் குறித்த நேபாள பிரதமரின் கருத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்
By: Karunakaran Wed, 15 July 2020 09:13:11 AM
இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் தான் ராமரின் பிறப்பிடமாக அனைவராலும் நம்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ராமரின் பிறப்பிடமாக கோடிக்கணக்கான இந்துக்களால் நம்பப்படும் இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் என்பது உண்மையில் அவரது பிறப்பிடம் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், காத்மண்டு அருகே உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம்தான் ராமரின் உண்மையான பிறந்த இடம் என்று தெரிவித்துள்ளார். மேலும், கடவுள் ராமர் ஒரு நேபாளி. அவர் இந்தியர் அல்ல என்று ஒலி தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து நேபாள நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, நேபாள நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமர் பற்றி பிரதமர் சர்மா ஒலி தெரிவித்தது அரசியல் ரீதியான கருத்து அல்ல. அயோத்தியின் மாண்பை குறைக்கும் வகையில் கேபி சர்மா ஒலி அந்த கருத்தை தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் கேபி சர்மா ஒலி கூறவில்லை என நேபாள நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் கடவுள் ராமர் ஒரு நேபாளி என்று ஒலி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.