தஞ்சை அருகே கபிஸ்தலத்தில் பைக்கை எரித்த மர்மநபர்கள்
By: Nagaraj Sat, 16 Sept 2023 11:08:10 AM
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே ஜல்ஜீவன் திட்ட பணியாளரின் பைக்கை எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல் சரகத்திற்குட்பட்ட வீரமாங்குடி கொள்ளிடக்கரையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி கடந்த 13ம் தேதி துவங்கப்பட்டது.
இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்ததும் இரவு கொள்ளிடம் ஆற்றில் தங்கி உள்ளனர். அப்பணியாளர்களுள் ஒருவர் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் செந்தில் வேலன் (42). இவர் தனது பைக்கை பணி நடைபெறும் கரையில் அமைக்கப்பட்டுள்ள படுதாவிலான கொட்டகையில் வைத்து விட்டு சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் எரிந்த நிலையில் எலும்புக்கூடு போல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.