- வீடு›
- செய்திகள்›
- காசிமேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்கள் மாயம்; தேடும் பணி தீவிரம்
காசிமேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்கள் மாயம்; தேடும் பணி தீவிரம்
By: Monisha Tue, 11 Aug 2020 11:02:26 AM
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள், 10 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை எடுத்துக்கொண்டு கடலுக்குள் 70 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடிக்கச் சென்றனர்.
வழக்கமாக 7 நாட்களில் கரைக்கு திரும்ப வேண்டிய மீனவர்கள், 20 நாட்கள் ஆகியும் இதுவரை கரை திரும்பவில்லை. மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களின் உறவினர்கள் போன் செய்தபோதும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மீனவர்கள் அனைவரும் மாயமாகிவிட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்களின் குடும்பத்தினர், மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தருமாறு சென்னை காசிமேடு மீன்துறை உதவி இயக்குனர் வேலனிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து அவரது நேரடி மேற்பார்வையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான சென்னை மீனவர்களை கண்டுபிடிக்க ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா, அந்தமான் பகுதிகளில் கடலோர காவல்படையினர் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேடி வருகின்றனர்.
இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:- காணாமல் போன படகில் உள்ள மீனவர்களை, மீன் துறையினர் செயற்கைக் கோள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காணாமல் போன படகின் விவரம் தெரிவிக்கப்பட்டு, அவர்களையும் தேடுதல் பணி மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது வருகிறது. காணாமல் போன மீனவர்கள் மற்றும் படகினை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பாக மீட்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.