மதுக்கடைகளை திறக்க நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்...மு.க ஸ்டாலின் கண்டனம்
By: Monisha Mon, 17 Aug 2020 12:25:50 PM
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்றய தினம் இரவுடன் தமிழகத்தில் உள்ள 5,330 டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டன.
அதன்பின்னர், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்படாமல், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என்று நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
"சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது!" என்று பதிவிட்டுள்ளார்.