நவ.16ந்தேதி பள்ளி, கல்லூரிகளை திறப்பது கண்டனத்திற்குரியது; மு.க.ஸ்டாலின்
By: Monisha Tue, 03 Nov 2020 4:11:20 PM
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்தநிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பள்ளிகளில் வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நவம்பர் 16ந்தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
நவம்பர் 16ந்தேதி பள்ளிகள் திறப்பு என்ற அறிவிப்பை முதலமைச்சர் எடப்படி பழனிசாமி நிறுத்தி வைக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
நவம்பருக்கு பதில் 2021 ஜனவரி இறுதியில் அப்போதுள்ள சூழ்நிலையை ஆய்வு செய்து பள்ளிகளை திறக்கலாம். கொரோனா 2வது அலை வரும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் நவ.16ந்தேதி பள்ளி, கல்லூரிகளை திறப்பது கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.