சீனாவுக்கு தக்க பாடம் புகட்ட மோடி நல்ல முடிவு எடுப்பார் - எடியூரப்பா
By: Karunakaran Thu, 18 June 2020 11:58:19 AM
சமீபத்தில் லடாக் எல்லையில் சீன ராணுவதினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தடுத்தனர். இருப்பினும் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவி இந்திய ராணுவத்தை தாக்கியது.
லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சீனா விவகாரம் குறித்து கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி அளித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று அவர் பேட்டி அளித்தபோது, இந்திய எல்லையில் சீனா அத்துமீறி நடந்து கொள்வதாகவும், இந்தியா அமைதியை விரும்பினால், சீனா குழப்பத்தை ஏற்படுத்தி இந்திய ராணுவ வீரர்களை கொன்றுள்ளதாகவும், சீனாவின் இந்த அத்துமீறலை சகித்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், சீனாவின் இந்த நடவடிக்கையில் பிரதமர் மோடி கவனம் செலுத்தி, அனைவருடனும் ஆலோசனை நடத்தியுள்ளார் எனவும், சீனாவுக்கு தக்க பாடம் புகட்ட மோடி நல்ல முடிவு எடுப்பார். சீனாவுக்கு தக்க பாடம் புகட்டும் பலம் இந்தியாவுக்கு உள்ளது எனவும், அதனால் சீனா தனது நடவடிக்கையை மாற்றிக்கொள்வது நல்லது எனவும் கூறியுள்ளார்.