இந்தியாவில் கடந்த 24 நேரத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Sun, 14 June 2020 11:33:27 AM
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. கொரோனா காரணமாக இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 11,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,20,922 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,54,330-லிருந்து 1,62,379 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,884-லிருந்து 9,195 ஆக அதிகரித்தள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக 1,49,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள முககவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.