அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையேயான சண்டையில் உயிரிழப்பு 250-ஐ கடந்தது
By: Karunakaran Wed, 07 Oct 2020 6:22:17 PM
அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம், அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்கள் ஆகும். 1994-ம் ஆண்டு இரு நாடுகளும் இடையே நடந்த போரில் இந்த மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றிய பின், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்பின், அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் நிர்வகித்து வந்தனர்.
அன்றில் இருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது. பல ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. நகோர்னோ - கராபத் மாணத்தை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தொடு அசர்பைஜான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு அர்மீனிய ஆதரவு படையினர் பதில் தாக்குதல் கொடுத்து வந்தனர்.
அசர்பைஜானுக்கு துருக்கி ஆயுதம் வழங்கியும், சிரியா, லிபியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களை சண்டையில் களமிறக்கியும் நேரடி உதவி செய்து வருகிறது. துருக்கியின் தலையீட்டிற்கு ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ், சிரியா போன்ற பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 10 நாட்களாக நடைபெற்று வரும் இந்த மோதலில் குடியிருப்பு பகுதிகள் இரு தரப்பு படையினராலும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
அர்மீனிய ஆதரவு நகோர்னோ-கராபத் படை தரப்பில் வெளியிட்டுள்ள தகவலில் தங்கள் பகுதியை சேர்ந்த 244 பாதுகாப்பு படையினரும், 19 பொதுமக்களும் அசர்பைஜான் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசர்பைஜான் தரப்பில் வெளியிட்டு தகவலில் 27 அசர்பைஜான் மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு படையினர் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை அசர்பைஜான் வெளியிடவில்லை. இதன் மூலம் நகோர்னோ-கராபாத் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.