- வீடு›
- செய்திகள்›
- பெரும்பாலானோர் எதிர்ப்புச்சக்தியை பெறுவதற்கு பயனுள்ள தடுப்பூசி தேவை - உலக சுகாதார நிறுவனம்
பெரும்பாலானோர் எதிர்ப்புச்சக்தியை பெறுவதற்கு பயனுள்ள தடுப்பூசி தேவை - உலக சுகாதார நிறுவனம்
By: Karunakaran Wed, 19 Aug 2020 4:21:21 PM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவி 8 மாதங்கள் ஆகியும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் தொற்று, எதற்கும் கட்டுப்படாமல் பரவி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மந்தை எதிர்ப்புச்சக்தி குறித்து பரவலாக பேசப்படுகிறது.
மந்தை எதிர்ப்புச்சக்தி என்பது ஒரு வைரஸ் தொற்றை தடுப்பதற்கு மக்களில் 70 சதவீதத்தினராவது எதிர்ப்புச்சக்தி பெறுவதாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சில வல்லுனர்கள் 50 சதவீதம் பேராவது எதிர்ப்புச்சக்தியை பெற்றால் பாதுகாப்பானது என்று கூறுகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால பிரிவின் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரேயான் இதுகுறித்து கூறுகையில், நாம் மந்தை எதிர்ப்புச்சக்தியை அடைவதற்கான நம்பிக்கையுடன் வாழக்கூடாது என்று கூறியுள்ளார்.
உலகளவிய மக்கள் தொகை, இந்த கொரோனா தொற்று நோயை தடுக்க தேவையான நோய் எதிர்ப்புச்சக்தியை பெறும் அளவுக்கு நாம் நெருங்கக்கூட இல்லை. இது தீர்வு ஆகாது. நாங்கள் இதை தீர்வாக பார்க்கவும் இல்லை என மைக்கேல் ரேயான் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இதுகுறித்து உலக சுகாதார நிறுவன தலைவரின் மூத்த ஆலோசகர் டாக்டர் புரூஸ் அய்ல்வர்ட் கூறுகையில், பெரும்பாலானோர் எதிர்ப்புச்சக்தியை பெறுவதற்கு பயனுள்ள தடுப்பூசி தேவை, அது 50 சதவீத மக்களையாவது சென்று அடைவதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.